Wednesday, October 5, 2011

தேவதைகள்....2

வீசப்படும் மலர்களிடையே

கண் திறந்து பார்க்கிறாள் தேவி.

செல்ல நடை தேவதைகள்

கொலுசின் ஒலி நகைக்க வைக்கின்றன

தூக்கம் வருது என

தோள் சாய்கிறது குழந்தை

முகம் வாடி மீண்டும்

கல்லாகினாள் தேவி!

-------------

அரிச்சுவடி வைத்திருந்தாள் அவள்

இது ஆனா

இது ஆவனா

ஒவ்வொன்றாய் சொல்லி வந்தவள்

பாதியில் மறந்துட்டேன் என்றாள்

விடுபட்ட எழுத்துக்கள்

தலை குனிந்து வெளியேறின!

-----------------------------

வாணி விழா

சின்ன பாதங்களில்

சலங்கை கட்டி

பெரிய கண்ணில் மையிட்டு

தா தெய் தித் தெய் என

கண்ணனை அழைக்கின்றாள்

எம்மையும் அழைப்பாள் என

மற்ற தெய்வங்கள்

நிற்கின்றன வரிசையில்!


Tuesday, October 4, 2011

தேவதைகள்


தேவதைகள்

சின்ன சின்ன பாவாடைகள்
பட்டு வண்ண சட்டைகள்
குடை குடையாய் சிமிக்கிகள்
குட்டி கரும் நிலவாய் பொட்டு
வண்ண வண்ண முத்து மாலை
ஜல் ஜல் சத்தமிடும் வளையல்கள்
கொஞ்சிக் கதை பேசும் கொலுசுகள்
எங்கும் நிறைந்திருக்கும் புன்னகைகள்!
இது தேவிகள் விழா இல்லை,
குட்டி குட்டி தேவதைகள் திருவிழா!

-----------------

சுட்டு விரல் மடித்து
கட்டை விரல் சேர்த்து
சிறு கை குவித்து
தத்தா கரம் பிடித்து
அரிசியில் எழுதுகையில்
ஒவ்வொரு முறையும்
வித்யாரம்பிக்கிறது தமிழ்!

-------------------------

பாவாடை கட்டணுமாம்
பூ வைக்கணுமாம்
சிமிக்கி போடணுமாம்
இந்த வளையல் தான் வேணுமாம்
தேவதைகள் தயாராகின்றன
தெய்வத்தின் தரிசனத்திற்காய்!

--------------------

ஒருவர் மந்திரம் சொல்ல
சிலர் மலர்கள் தூவ
இமை அசைக்காது ரசிக்கிறாள் தேவி
பட்டுப் பாவாடைகளில்
குட்டி தேவதைகளை!

--------------

பொங்கல், கடலை
அவல், வடை
மோட்சம் பெறுகின்றன
குட்டி இதழ்களில்
சுவைக்கப்பட்டு!

--------

நான் லக்ஷ்மி,
நீ சரஸ்வதி,
அவள் துர்க்கை
தமக்குள் பிரித்துக் கொள்கின்றனர்.
என்னை யார் எடுப்பார்கள் ?
ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன
தெய்வங்கள்!

Wednesday, August 26, 2009

நாளை உலகம் அழியுமாம்

கால்கள் நடை
போட்டனநாம் கைகோர்த்து
காதல் பயணம் செய்த பாதைகளில்!
நீ பறித்து அணிவித்த
போகன்விலா மலர்
அதிக அழகாய் இருந்தது இன்று!
கடல் அலைகளின்
காதல் முயற்சி
ஜெயிக்குமெனஉள்ளம் சொல்கிறது இன்று!
நீ கட்டிய மணல் மாளிகையில்
மகாராணியாய் நானும்
காவலனாய் நீயும் காதல் செய்கிறோம் இன்றும்!
உன் தோளில் கை பத்தித்து
தாண்டிய தண்ட வாளங்களில்
தடுக்கி விழாமல் நடக்கிறேன் உன் நினைவில்!
ரயில் சில்லுகளின் நசுக்கி
நீ செய்த நாணய மோதிரம்
விரலினை அழுத்தியது உன் நினைவு போல!
உன்னோடு சண்டை போட்டு
உண்டது தொண்டையில் சிக்கியது
யாரோ கடித்து வீசிய சோளம் கண்ட போது!
வீசும் தென்றல் கூட
உன் சுவாசத்தைகொண்டு வந்தது
கத கதப்பாய்!
உன்னோடு நான் இருந்த
அத்தனை நொடிகளையும் கோர்த்து
மாலை செய்கிறேன்!
நாளைக்குள் நீ வருவாய்
நினைவு மாலை சூட்டியே
உனை மூர்ச்சையாக்குவேன்!
நாளை உலகம் அழியுமாம்
அழியட்டுமே எனக்கென்னநாம் தான்
யுகம் கடந்து வாழ்வோமே காதலுடன்!

பெண் குழந்தை


தலை சுற்றியது
வாந்தி உயிர் எடுத்தது
கருதான் என்று முடிவானதும்
வலிகளை ஏற்க துணிந்தது உடல்
கண் இப்படி மூக்கு இப்படி
சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில் நிறுத்தியது
உருவம் இல்லாத குழந்தை
ரோஸ் நிற உடையும்
தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும்
கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்
ஆசையாய் காத்திருந்து
வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில் வாங்கியதும்
வலி மறைந்தது அதன் அழகில்
பெண்தானா உனக்கும்
நமக்குத்தான் கொடுப்பினையே இல்லை
அம்மா சொன்ன போது
வலி அப்போது தெரிந்து
என் பிறப்புக்காய்!

தேவை

வக்கணையாய் பேசுகிறார்
வேளாண்மைக்கு ஆலோசனையும்
மீள இருப்புக்கு உத்தர வாதமும்!
கலையா உடை உடுத்தி
குளிர்க் காற்றும் வாங்கி
மக்கள் நலம் பேசுகிறார்களாம்!
அரை டம்ளர் தண்ணிக்கு
முழு நாள் காத்திருக்கும்
அந்த மனிதருக்கு வசந்தம் எங்கே?
நோய் முற்றினாலும்
ஆங்கே நாதியில்லை
அமரர் ஊர்தியில் இடமும் இல்லை!
கொடுத்த பால் நிறையும் முன்னே
பின் புறத்தில் ஈரம் காட்டும்
பச்சைக் குழந்தைக்கு என்ன வழி?
வானம் பொத்துக் கொண்டால்
தறப்பால் தாங்குமா
உடலை அணையாக்கும் நிலை மாறுமா?
உச்சி வெயில் வேளையில்
பதிய வரச்சொல்லி
மல்லிகள் அழகு பார்ப்பது தீருமா?
உப்பும் உரைப்பும் இல்லா
வெறும் பச்சைத் தண்ணி குடித்து
எத்தனை காலம் உயிர் தாங்கும்?
வசந்தம் வருமாம்
பாதை போடுதலாம்
நீர்ப்பாசனமாம் ரயில் பாதையாம்!
புதிய நிர்மானமாம்
விவசாய விருத்தியாம்
இன்னும் அபிவிருத்தியாம் அங்கு!
எதுவும் வேண்டாம்
உடனே தேவை சுடுகாடு
மொத்தமாய் எம்மை புதைத்துவிடு!

Wednesday, July 1, 2009

ஆனால் நீ

ஒற்றை ரோஜாவுடன்
கால் கடுக்க காத்திருக்கவில்லை நீ!
காத தூரம் போக
கெஞ்சி கொஞ்சியதில்லை நீ!
காலில் முள்படும் என்று
பாதையை திட்டியவனில்லை நீ!
பாதி குளிர்களியை
பறித்து உண்டதில்லை நீ!
விடிய விடிய குறுந்தகவல்
அனுப்பவில்லை நீ!
வேலை நேரத்தில் ஒன்றே ஒன்று என
முத்த சத்தம் கோரியதில்லை நீ!

ஆனால்

கண்களில் கண்ணீர் கண்டு
கைக்குட்டையானது உன் விரல்கள்!
துயரம் வரும் போது
சாய்ந்து கொள்ள தந்தாய் உன் தோள்!
தனிமையில் துவண்ட போது
கோர்த்துக் கொண்டது உன் கைகள்!
பரீட்சை நேரத்து கட்டாய உறக்கமும்
விடிகாலை விழிப்பும் உன் அழைப்பில்!
நோய் கண்ட போது
மருந்தாய் இருந்தது உன் பார்வை!

Monday, June 29, 2009

திருமணம்

நான் உன்னோடு சப்த பதம் கடந்து
அடி வைத்து விட்டேன்!
நாம் பார்த்த நட்சத்திரங்கள்
அருந்ததிகளின் கூட்டாக இருக்கும்!
ஆழியில் விழுந்து குளித்தவர்கள் நாம்
கணையாழிதான் இல்லை!
வாடா மல்லிகையும் கடதாசிப்பூவும்
இயற்கை தந்த மாலையாய் இருந்தது!
ஓராயிரம் முறை சேர்த்து எழுத்தப்பட்டிருக்கும்
நம் பெயர்கள்!
உன் விரல் கோர்த்து நடந்த போது
காதல் அக்கினி வளர்த்துக் கொண்டிருந்தது!
காற்றும் நீரும் நிலமும் ஆசீர்வதித்தன!
மந்திரம் ஓதி முடித்திருந்தது இடியோசை !
புகைப்படம் எடுத்தது மின்னல்!
இனிதே நிறைவேறியது
நம் இருமனங்களின் சங்கமம்!

யாதுமாகினாய் நீ

பட்டாம் பூச்சியின் அழகில்
மலர்களின் மென்மையில்
கடலின் அலையில்
வானவில்லை வர்ணத்தில்
காலம் போயிருக்கும்
உனை காணாதிருந்திருந்தால்!
வார்த்தைகள் கூட்டி
தமிழின் நளினம் காட்டினாய் நீ!
வேதனைகள் பழகிக் கொள்ள
என் துன்பமாய் வந்தாய் நீ!
இரவின் இருட்டில் விழிகள் பழக
ஓளியற்ற வழியாகினாய் நீ!
என் முரட்டுப் பிடிவாதம்
வரட்டு கௌரவம் அழித்தாய் நீ!
தவிப்புகளை தனியனாக்கினாய்!
இன்பங்களை மாறிலியாக்கினாய்!!
என் பந்தங்களை உனக்காக்கினாய்!
இறுதியில் நானே நீயாகினாய்!
யாதும் ஆகினாய் நீ நானாகி!

Thursday, May 7, 2009

மழை


ஏய் வசீ உள்ளே வாங்க என் கத்திக் கொண்டே வருகிறேன்
மழையில் நனைந்து சிரித்தபடி கைகளில் தண்ணீர் ஏந்தி சிரிக்கிறான் அவன்.

வசி வேண்டாம்பா மழை ரொம்ப அதிகமா இருக்குள்ள அச்சாப்ப் பிள்ளையெல்லே
வீட்டுக்குள்ள வாங்கோ என இழுக்க போக என்னையும் சேர்த்து நனைய வைக்கிறான் என்
ஆறுவயதுப் பாலகன்.

வசீ வாங்கோ அப்பன், அப்பா வரும் நேரமாச்செல்லே உடுப்பு மாத்திட்டு நிண்டால்
அப்பாவோட வெளியே போகலாம் என பொய் சொல்கிறேன்.

போங்கம்மா நான் வரேலை அப்பாவையும் நனைய வைக்கப் போறேன் என்று சொல்லி மீண்டும்
நனைய.

எண்ட செல்லமெல்லே என்று அவனை தூக்கி வந்து அறைக்குள் விட்டு தலை துவட்டி
விடுகிறேன்.

அம்மா அப்பா இண்டைக்கு வந்துட்டு எப்ப போவார்? நாங்களும் அவரோட போய்
இருக்கலாமே?

ஓடிக்க்லோனை தலையில் பூசிய படியே. போகலாமே உங்களுக்கு அங்கதானே ஸ்கூல் பார்த்து
வெச்சிருக்கோம்
அடுத்த கிழமையே போகலாம் என்ன என்று அவனுக்கு உடை மாற்றி விட்டுவிடுகிறேன்.

என் பெயர் நந்தினி கணவர் வசீகரன் மகன் வசுநந்தன். வசீகரன் வன்னியில் அரச
பணியில் இருக்கிறார் நாம் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறோம் ஒவ்வொரு
வாரமும் அவர் வந்து செல்வது வழக்கம் நாமும் சேரந்து போகலாம் என
காத்திருக்கிறோம். அவர் தனித்தும் நாம் இங்கும் என இருப்பது எவ்வலவு காலம் என
யோசிக்கிறேன்.

அய்யா அப்பா வந்தாச்சு வந்தாச்சு என ஓடி செல்கிறான் வாசலுக்கு.
அவனை தூக்கிய படி வந்த வசீகர் என்னப்பா நீரும் மழையில் விளையாடினீரே
நல்லாருக்கு. என்று விட்டு வசியுடன் விலையாடிய படியே இரவு உணவுக்கு
தயாரானார்கள்

அம்மா வெள்ளைப் புட்டு கோழியும் செய்யுங்கோ என்றுவிட்டு விளையாடிலேயே
மும்முரமாய் இருந்தான் அப்பாவின் காலையே சுற்றி வந்தான் வசி.

அப்போது தட தட என கதவு தட்டும் சத்தம் பயங்கரமாக இருந்தது.

அப்பா யாரெண்டு பாருங்கோ என சொல்ல வசீகரன் எழுந்து போய் கதவைத் திறந்தார்.

அங்கே சீருடை தரித்த இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர்
விசாரணை என்றனர்.

வசீகரன் வன்னியில் இருந்து வந்திருப்பது தெரிந்ததும் கேள்விகள் அதிகமாயின
விசாரணை இருக்கு என்று அழைத்து போயினர்

வசி அழுதும் எனது அழுகையையும் பொருட்டில்லாது இழுத்துப் போயினர்.

நாம் இருவரும் தனித்து விடப் பட்டோம் இருவரின் கண்ணிலும் கண்ணீர் மழை எனப்
பொழியத் துவங்கியது
வெளியில் மழை நின்றிருந்தது.

மழையும் வெயிலும் மாறி மாறி வந்தாலும் வசீகரன் பற்றி மட்டும் பதிலே இல்லை

வசீக்கும் நிலமை புரியத் துவங்கியதில் அப்பா பற்றி கேள்வி எழுவதில்லை, காலம்
அதன் பாட்டுக்கு போகிறது
இப்போது வசிக்கும் பதினொரு வயதாகிறது. மழை பெய்கிறது அதனை ரசிக்கத்தான்
அவனுக்கு இப்போது பொழுது இருப்பதில்லை.

உலகம் அழியட்டுமே


கண்கள் கனன்றது
காலையில் ஏன் இந்த வெப்பம்
அதிகாலைப் பனியில்
மூழ்கிப் போயிருக்கும் மலர்கள்
ஏன் கறுத்திருந்தன?

கார்காலம் போல்
மூண்டு கொண்ட போர் கோலங்களாலா?
மனிதனே மனிதனை எரிக்க
கண்டு கொண்ட புது வஸ்துக்களாலா?

மரித்துக் கொண்டிருக்கும் மனிதனை
வெறுத்து ஒதுக்க துவங்கிய
ஒளிமுதலின் வேலையோ?
கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகிறது உலகம்.

உறக்கத்திலிருந்து விழிக்கிறது வீடுகள்
அடுத்த வீட்டில் எரிவது பார்த்து
அறைக்குள் கதவடைக்கிறது சுயநலம்
மெல்ல மெல்லமாய் தீச்சுவாலையாகிறது

சேர்த்து வைத்த பணத்தை
எண்ணி எடுத்துக் கொண்டு ஓடுகிறது
ஊழலில் விழைந்த கூட்டம்
அவர்களை அறியாதே தொடர்கிறது தீ

லஞ்சம் வாங்கி காணி சேர்த்தவர்
கண் முன்னே எரிவது கண்டு
லஞ்சம் கொடுத்தவன் வயிறு போல புகைந்தார்
உலகம் அக்கினிக்குள் முழுவதுமானது

அக்காளை கூட விட்டு வைக்காது
காமாக்னி வளர்த்தவன் சுதாரிப்பதற்குள்
படுக்கையிலும் பற்றிக் கொண்டது
நின்று கொன்றது அக்கினி தெய்வம்

இம்சைகள் கொண்ட உலகம்
சில்லு சில்லாய் வெடிக்கப் போகிறது
அக்கினியின் சிறகுக்குள் உலகம்!

புதிய உலகம் மெல்லமாய் எட்டிப் பார்த்தது
குழந்தை சிரிப்புடன் இயற்கை வனப்புடன்!

கட்டிப் போட்டு காதல் செய்கிறாய்

கவிதை கவிதை என
உன்னைப் படுத்தியதில்
நீ வாங்கி கொடுத்த
பாரதியார் கவிதைகள்
படிக்கப்படாமலே இருக்கிறது
உன்னால் படிக்கப்படாத என்னைப் போலவே

ஒரே ஒரு கவிதை
எழுதி தா என்றேன்
வெறும் நிமிட செலவில்
நீ எழுதியது
நம்முடைய இணைந்த பெயர்கள்

'எனக்காக என்ன தருவாய் '
ஆவலாய் கேட்டு நின்றேன்
அலட்சியமாய் ஒன்றும் இல்லை என்றாய்
சோர்ந்து போய் குனிகையில்
''நானே நீ தானே
நமக்குள் ஏது பாகப்பிரிவினை'
என காதல் செய்கிறாய் நீ

உன்னை ரசிக்கிறேன்

உனக்கும் எனக்கும்தான்
எத்தனை முரண்பாடுகள்
ஆனாலும்
உனை விட்டு விலக மட்டும்
காரணம் கிடைத்ததே இல்லை


எப்போதாவது நீ
கோபத்தில் பேசாதிருந்தால்
அன்று மட்டும்
உலகமே நின்று விடுகிறது எனக்கு


இரு இரு என்று
இருட்டும் வரை பேசிவிட்டு
வீடு வரை போவாயா என
பத்தாயிரம் தடவை நீ கேட்பதில்
தெரியும் தவிப்பில்
இருக்கிறது காதல்!

வேண்டாம் வேண்டாம் என்றே
பேசிய பொழுதுகள்
புலர்வது தெரியாமல்
முடிந்த இரவுகள்
அறிந்த காதலை
நாம் ஒத்துக் கொண்டதே இல்லை


கேலி பேசிய காவலருக்கும்
மாமா என கட்டிக் கொண்ட
பக்கத்து வீட்டு சிறுமிக்கும்
நீ எனக்கு யார் என்று
தெரிந்திருந்ததை புரிந்துகொள்ள
நாட்கள் தேவைப்பட்டன எனக்கு

உன்னை ரசிக்கிறேன்

நீ குழந்தையாகிறாய் அடிக்கடி
அங்கே நில்
அதை செய்யாதே
பேசாது வா
கண்டிப்புகளுடன் நான்


எத்தனை முறை
கோபித்தாலும்
அத்தனை முறை
நெருக்கமாகிறாய் நீ


எவ்வளவு சொன்னாலும்
அடம்பிடிக்கும் குழந்தையாவே
சாதித்துக் கொள்கிறாய் நீ
உன்னை கண்டித்தே
தளர்ந்து போகிறேன் நான்

உன்னை ரசிக்கிறேன்

திரும்பிப் பார்த்தால்
திரும்பி வருவேன்
திரும்ப திரும்ப அடம் செய்கிறாய் நீ
திரும்பிப் பார்க்காமலே
கூட வர மாட்டாயோ


மனம் கேட்கிறது
போ போ என்று துரத்தும் போதெல்லாம்
போகாமல் சிணுங்குகிறாய்
மீசை வைத்த குழந்தயாய்
அள்ளி அணைக்க கைகள் பறந்தாலும்
அரக்கியாகவே துரத்துகிறேன் உனை


பேசி முடித்த பின்னும்
மறந்துட்டேன் என நீ
அழைத்துப் பேசும் எதுவுமே
புதிதாக இல்லாத போதும்
தவிர்க்க முனைந்ததில்லை நான்


நடு நிசியில் ஆரம்பிக்கும்
காலை வணக்கம்
பகல் பன்னிரண்டிலும்
முடியாது தொடர்வது
உன்னால் மட்டுமே முடிகிறது

உன்னோடு வாழத்தானே உயிர் வாழ்கிறேன்

உன்னைப்பற்றி எழுதவென
வார்த்தைகள் தேடினேன்
மெல்லமாய் அருகில் வருகிறாய்


தள்ளிப்போ என சொல்லி
எழுதுகோல்களை நகர்த்தினால்
கைகளை பற்றிக் கொள்கிறாய்


அதிகமாய் எழுதாதே
கண்படும் என்கிறாய்
"கண்பட்டதால் தானே காதல்"
சொல்லி சிரிக்கிறேன்


எதற்கு இந்த கிறுக்கல்
கேட்டு பேனாவை பறிக்கிறாய்
நீ எனக்கு மட்டும்
ஒப்பந்தம் இது என்றேன்


அடிமை சாசனம் தருகிறேன் என்று
அர்த்தமாய் அருகில் வருகிறாய்
விழிகளில் விழுங்கிக்கொண்டாய்
வெறுமையாய் கடதாசி காற்றில்!

தேடல்

காலை விடிகிறதோ இல்லையோ
என்னுடைய தேடல் தொடங்கி விடுகிறது
ஒவ்வொரு முகாம்களிலும்
ரத்த வாசனையுடன் முடிகிறது தேடல்

கையில் பத்திரிக்கை ஆதாரம்
பெயர் சொல்லி தேடவும் ஆளில்லை
அநாதையாய் விடப்பட்ட மக்களுக்கு
ஆதரவுக்கு புன்னகைக்காது தொடரும் என் தேடல்

மருத்துவமனை வந்தும்
நீ காலில்லாமலோ கையில்லாமலோ
உயிர் கொண்டாவது இருப்பாய் என
தேடிக் கொண்டே தொடர்கிறது தேடல்

ஏன் என்ன ஏது என்ற கேள்விக்கெல்லாம்
பதில் தேடி சொல்லி சென்றால்
வெறும் கொடூரப் பார்வையின்
தொடர்தலில் முடிகிறது தேடல்

காயம் கொண்ட குழந்தையும்
எதையோ இழந்த பெண்ணின் பார்வையும்
என்னில் எதையோ எதிர்பார்ப்பது
புரிந்தும் அகற்றிவிட்டு செல்கிறது என் தேடல்

பத்திரிக்கையில் வந்தது பொய்யோ
நீ வந்த சேதி நான் கண்ட கனவோ
முகாம் வாசலில் மண்டியிட்டு
கதறிக் கொண்டே இருக்கிறது என் தேடல்

வன்னி விட்டு வந்தோர் பெயரில்
உன் பெயர் இருக்கவே கண்ட உற்சாகம்
நீரடித்த கோலமாய் விலகிப் போய்விட
தேடிக் கொண்டே இருக்கிறேன் பிணவறையிலும்

Tuesday, December 23, 2008

முதல் காதல்


மெல்ல தவழ்ந்து வரும்
தென்றல் போல
மனதை வருடிச் செல்லும்
புயலாய் மாறி சில நேரம்
சிதிலமும் செய்யும்

மலரிலும் அழகாய்
முட்கள் தோன்றும்
தேனிலும் அதிகமாய்
பாகற்காய் இனிக்கும்

பேசும் வார்த்தைகள்
மறந்து போக
பேசாத வார்த்தைக்காய்
மனம் தந்தி அடிக்கும்

அமாவாசை இருட்டிலும்
பௌர்ணமி தோன்றும்
வானவில்லும் உடலில்
ஆடையாக மாறிப் போகும்

பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..

Friday, November 28, 2008

அசந்தர்ப்பம்..

பிறந்தேன் பெண்ணாக
ஆண்டுகள் பலவற்றுக்கும் முன்னே
கனவுகள் கண்டேன் பலிக்காமலே
வாழ்கிறேன் முதிர்கன்னியாக

ஒவ்வொரு இரவும்
தலைக் குளியலின் முடிவாக
தலையணை நனைக்கும்
வற்றா நதியாக கண்ணீர்

விதவை கூட கொடுத்துவைத்தவள்
எம்முடன் ஒப்பிடும் பொழுது
விதி என்று விட்டுவிடுவர்
விளையாட்டுப் பொருளாய் ஆக்காது

எத்தனைதரம்தான் சிரிப்பது
தலைக்கு மை அடித்தும்
இன்னும் கழியாத பெண்மை
பார்ப்பவரை எல்லாம் கணவனாய்
வரித்து வாழ்ந்த பின்
தட்டிக் கழிக்கும் தபால்கள்

எத்தனையோ பார்த்தபின்
அரிதாரம் போட்டுக் கொண்டேன்
தலைகுனிந்து பலகாரம் கொடுத்தேன்
சேவித்தேன் அரைமனதாய்
நம்பிக்கை இல்லாமல்
பார்க்க விரும்பாத முகமாய்
மறந்து போன மாப்பிள்ளை
சென்று நாட்கள் ஆயின
வழக்கம் போலவே தபால்

கசக்காமல் பிரித்தேன்
பெண்ணைப் பிடித்திருக்கிறது
திருமண ஏற்பாடு செய்யவும்
நம்பிக்கை இல்லாமலே மீண்டும்
மறுபடியும் படித்தும்
இன்னும் நினைவில் வரா
அந்த மாப்பிளை முகம் தவிர
மறுத்த மற்றவர் முகம் எல்லாம்
வந்தன நினைவில்
அசந்தர்ப்பமாகவே..

Thursday, November 27, 2008