
கண்கள் கனன்றது
காலையில் ஏன் இந்த வெப்பம்
அதிகாலைப் பனியில்
மூழ்கிப் போயிருக்கும் மலர்கள்
ஏன் கறுத்திருந்தன?
கார்காலம் போல்
மூண்டு கொண்ட போர் கோலங்களாலா?
மனிதனே மனிதனை எரிக்க
கண்டு கொண்ட புது வஸ்துக்களாலா?
மரித்துக் கொண்டிருக்கும் மனிதனை
வெறுத்து ஒதுக்க துவங்கிய
ஒளிமுதலின் வேலையோ?
கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகிறது உலகம்.
உறக்கத்திலிருந்து விழிக்கிறது வீடுகள்
அடுத்த வீட்டில் எரிவது பார்த்து
அறைக்குள் கதவடைக்கிறது சுயநலம்
மெல்ல மெல்லமாய் தீச்சுவாலையாகிறது
சேர்த்து வைத்த பணத்தை
எண்ணி எடுத்துக் கொண்டு ஓடுகிறது
ஊழலில் விழைந்த கூட்டம்
அவர்களை அறியாதே தொடர்கிறது தீ
லஞ்சம் வாங்கி காணி சேர்த்தவர்
கண் முன்னே எரிவது கண்டு
லஞ்சம் கொடுத்தவன் வயிறு போல புகைந்தார்
உலகம் அக்கினிக்குள் முழுவதுமானது
அக்காளை கூட விட்டு வைக்காது
காமாக்னி வளர்த்தவன் சுதாரிப்பதற்குள்
படுக்கையிலும் பற்றிக் கொண்டது
நின்று கொன்றது அக்கினி தெய்வம்
இம்சைகள் கொண்ட உலகம்
சில்லு சில்லாய் வெடிக்கப் போகிறது
அக்கினியின் சிறகுக்குள் உலகம்!
குழந்தை சிரிப்புடன் இயற்கை வனப்புடன்!
0 comments:
Post a Comment