Thursday, May 7, 2009

தேடல்

காலை விடிகிறதோ இல்லையோ
என்னுடைய தேடல் தொடங்கி விடுகிறது
ஒவ்வொரு முகாம்களிலும்
ரத்த வாசனையுடன் முடிகிறது தேடல்

கையில் பத்திரிக்கை ஆதாரம்
பெயர் சொல்லி தேடவும் ஆளில்லை
அநாதையாய் விடப்பட்ட மக்களுக்கு
ஆதரவுக்கு புன்னகைக்காது தொடரும் என் தேடல்

மருத்துவமனை வந்தும்
நீ காலில்லாமலோ கையில்லாமலோ
உயிர் கொண்டாவது இருப்பாய் என
தேடிக் கொண்டே தொடர்கிறது தேடல்

ஏன் என்ன ஏது என்ற கேள்விக்கெல்லாம்
பதில் தேடி சொல்லி சென்றால்
வெறும் கொடூரப் பார்வையின்
தொடர்தலில் முடிகிறது தேடல்

காயம் கொண்ட குழந்தையும்
எதையோ இழந்த பெண்ணின் பார்வையும்
என்னில் எதையோ எதிர்பார்ப்பது
புரிந்தும் அகற்றிவிட்டு செல்கிறது என் தேடல்

பத்திரிக்கையில் வந்தது பொய்யோ
நீ வந்த சேதி நான் கண்ட கனவோ
முகாம் வாசலில் மண்டியிட்டு
கதறிக் கொண்டே இருக்கிறது என் தேடல்

வன்னி விட்டு வந்தோர் பெயரில்
உன் பெயர் இருக்கவே கண்ட உற்சாகம்
நீரடித்த கோலமாய் விலகிப் போய்விட
தேடிக் கொண்டே இருக்கிறேன் பிணவறையிலும்

1 comments:

semmalai akash said...

தேடல் அருமையாயிருக்கு.