Wednesday, October 5, 2011

தேவதைகள்....2

வீசப்படும் மலர்களிடையே

கண் திறந்து பார்க்கிறாள் தேவி.

செல்ல நடை தேவதைகள்

கொலுசின் ஒலி நகைக்க வைக்கின்றன

தூக்கம் வருது என

தோள் சாய்கிறது குழந்தை

முகம் வாடி மீண்டும்

கல்லாகினாள் தேவி!

-------------

அரிச்சுவடி வைத்திருந்தாள் அவள்

இது ஆனா

இது ஆவனா

ஒவ்வொன்றாய் சொல்லி வந்தவள்

பாதியில் மறந்துட்டேன் என்றாள்

விடுபட்ட எழுத்துக்கள்

தலை குனிந்து வெளியேறின!

-----------------------------

வாணி விழா

சின்ன பாதங்களில்

சலங்கை கட்டி

பெரிய கண்ணில் மையிட்டு

தா தெய் தித் தெய் என

கண்ணனை அழைக்கின்றாள்

எம்மையும் அழைப்பாள் என

மற்ற தெய்வங்கள்

நிற்கின்றன வரிசையில்!


Tuesday, October 4, 2011

தேவதைகள்


தேவதைகள்

சின்ன சின்ன பாவாடைகள்
பட்டு வண்ண சட்டைகள்
குடை குடையாய் சிமிக்கிகள்
குட்டி கரும் நிலவாய் பொட்டு
வண்ண வண்ண முத்து மாலை
ஜல் ஜல் சத்தமிடும் வளையல்கள்
கொஞ்சிக் கதை பேசும் கொலுசுகள்
எங்கும் நிறைந்திருக்கும் புன்னகைகள்!
இது தேவிகள் விழா இல்லை,
குட்டி குட்டி தேவதைகள் திருவிழா!

-----------------

சுட்டு விரல் மடித்து
கட்டை விரல் சேர்த்து
சிறு கை குவித்து
தத்தா கரம் பிடித்து
அரிசியில் எழுதுகையில்
ஒவ்வொரு முறையும்
வித்யாரம்பிக்கிறது தமிழ்!

-------------------------

பாவாடை கட்டணுமாம்
பூ வைக்கணுமாம்
சிமிக்கி போடணுமாம்
இந்த வளையல் தான் வேணுமாம்
தேவதைகள் தயாராகின்றன
தெய்வத்தின் தரிசனத்திற்காய்!

--------------------

ஒருவர் மந்திரம் சொல்ல
சிலர் மலர்கள் தூவ
இமை அசைக்காது ரசிக்கிறாள் தேவி
பட்டுப் பாவாடைகளில்
குட்டி தேவதைகளை!

--------------

பொங்கல், கடலை
அவல், வடை
மோட்சம் பெறுகின்றன
குட்டி இதழ்களில்
சுவைக்கப்பட்டு!

--------

நான் லக்ஷ்மி,
நீ சரஸ்வதி,
அவள் துர்க்கை
தமக்குள் பிரித்துக் கொள்கின்றனர்.
என்னை யார் எடுப்பார்கள் ?
ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன
தெய்வங்கள்!