Wednesday, August 26, 2009

நாளை உலகம் அழியுமாம்

கால்கள் நடை
போட்டனநாம் கைகோர்த்து
காதல் பயணம் செய்த பாதைகளில்!
நீ பறித்து அணிவித்த
போகன்விலா மலர்
அதிக அழகாய் இருந்தது இன்று!
கடல் அலைகளின்
காதல் முயற்சி
ஜெயிக்குமெனஉள்ளம் சொல்கிறது இன்று!
நீ கட்டிய மணல் மாளிகையில்
மகாராணியாய் நானும்
காவலனாய் நீயும் காதல் செய்கிறோம் இன்றும்!
உன் தோளில் கை பத்தித்து
தாண்டிய தண்ட வாளங்களில்
தடுக்கி விழாமல் நடக்கிறேன் உன் நினைவில்!
ரயில் சில்லுகளின் நசுக்கி
நீ செய்த நாணய மோதிரம்
விரலினை அழுத்தியது உன் நினைவு போல!
உன்னோடு சண்டை போட்டு
உண்டது தொண்டையில் சிக்கியது
யாரோ கடித்து வீசிய சோளம் கண்ட போது!
வீசும் தென்றல் கூட
உன் சுவாசத்தைகொண்டு வந்தது
கத கதப்பாய்!
உன்னோடு நான் இருந்த
அத்தனை நொடிகளையும் கோர்த்து
மாலை செய்கிறேன்!
நாளைக்குள் நீ வருவாய்
நினைவு மாலை சூட்டியே
உனை மூர்ச்சையாக்குவேன்!
நாளை உலகம் அழியுமாம்
அழியட்டுமே எனக்கென்னநாம் தான்
யுகம் கடந்து வாழ்வோமே காதலுடன்!

0 comments: