வக்கணையாய் பேசுகிறார்
வேளாண்மைக்கு ஆலோசனையும்
மீள இருப்புக்கு உத்தர வாதமும்!
கலையா உடை உடுத்தி
குளிர்க் காற்றும் வாங்கி
மக்கள் நலம் பேசுகிறார்களாம்!
அரை டம்ளர் தண்ணிக்கு
முழு நாள் காத்திருக்கும்
அந்த மனிதருக்கு வசந்தம் எங்கே?
நோய் முற்றினாலும்
ஆங்கே நாதியில்லை
அமரர் ஊர்தியில் இடமும் இல்லை!
கொடுத்த பால் நிறையும் முன்னே
பின் புறத்தில் ஈரம் காட்டும்
பச்சைக் குழந்தைக்கு என்ன வழி?
வானம் பொத்துக் கொண்டால்
தறப்பால் தாங்குமா
உடலை அணையாக்கும் நிலை மாறுமா?
உச்சி வெயில் வேளையில்
பதிய வரச்சொல்லி
மல்லிகள் அழகு பார்ப்பது தீருமா?
உப்பும் உரைப்பும் இல்லா
வெறும் பச்சைத் தண்ணி குடித்து
எத்தனை காலம் உயிர் தாங்கும்?
வசந்தம் வருமாம்
பாதை போடுதலாம்
நீர்ப்பாசனமாம் ரயில் பாதையாம்!
புதிய நிர்மானமாம்
விவசாய விருத்தியாம்
இன்னும் அபிவிருத்தியாம் அங்கு!
எதுவும் வேண்டாம்
உடனே தேவை சுடுகாடு
மொத்தமாய் எம்மை புதைத்துவிடு!
0 comments:
Post a Comment