Monday, June 29, 2009

திருமணம்

நான் உன்னோடு சப்த பதம் கடந்து
அடி வைத்து விட்டேன்!
நாம் பார்த்த நட்சத்திரங்கள்
அருந்ததிகளின் கூட்டாக இருக்கும்!
ஆழியில் விழுந்து குளித்தவர்கள் நாம்
கணையாழிதான் இல்லை!
வாடா மல்லிகையும் கடதாசிப்பூவும்
இயற்கை தந்த மாலையாய் இருந்தது!
ஓராயிரம் முறை சேர்த்து எழுத்தப்பட்டிருக்கும்
நம் பெயர்கள்!
உன் விரல் கோர்த்து நடந்த போது
காதல் அக்கினி வளர்த்துக் கொண்டிருந்தது!
காற்றும் நீரும் நிலமும் ஆசீர்வதித்தன!
மந்திரம் ஓதி முடித்திருந்தது இடியோசை !
புகைப்படம் எடுத்தது மின்னல்!
இனிதே நிறைவேறியது
நம் இருமனங்களின் சங்கமம்!

யாதுமாகினாய் நீ

பட்டாம் பூச்சியின் அழகில்
மலர்களின் மென்மையில்
கடலின் அலையில்
வானவில்லை வர்ணத்தில்
காலம் போயிருக்கும்
உனை காணாதிருந்திருந்தால்!
வார்த்தைகள் கூட்டி
தமிழின் நளினம் காட்டினாய் நீ!
வேதனைகள் பழகிக் கொள்ள
என் துன்பமாய் வந்தாய் நீ!
இரவின் இருட்டில் விழிகள் பழக
ஓளியற்ற வழியாகினாய் நீ!
என் முரட்டுப் பிடிவாதம்
வரட்டு கௌரவம் அழித்தாய் நீ!
தவிப்புகளை தனியனாக்கினாய்!
இன்பங்களை மாறிலியாக்கினாய்!!
என் பந்தங்களை உனக்காக்கினாய்!
இறுதியில் நானே நீயாகினாய்!
யாதும் ஆகினாய் நீ நானாகி!

Thursday, May 7, 2009

மழை


ஏய் வசீ உள்ளே வாங்க என் கத்திக் கொண்டே வருகிறேன்
மழையில் நனைந்து சிரித்தபடி கைகளில் தண்ணீர் ஏந்தி சிரிக்கிறான் அவன்.

வசி வேண்டாம்பா மழை ரொம்ப அதிகமா இருக்குள்ள அச்சாப்ப் பிள்ளையெல்லே
வீட்டுக்குள்ள வாங்கோ என இழுக்க போக என்னையும் சேர்த்து நனைய வைக்கிறான் என்
ஆறுவயதுப் பாலகன்.

வசீ வாங்கோ அப்பன், அப்பா வரும் நேரமாச்செல்லே உடுப்பு மாத்திட்டு நிண்டால்
அப்பாவோட வெளியே போகலாம் என பொய் சொல்கிறேன்.

போங்கம்மா நான் வரேலை அப்பாவையும் நனைய வைக்கப் போறேன் என்று சொல்லி மீண்டும்
நனைய.

எண்ட செல்லமெல்லே என்று அவனை தூக்கி வந்து அறைக்குள் விட்டு தலை துவட்டி
விடுகிறேன்.

அம்மா அப்பா இண்டைக்கு வந்துட்டு எப்ப போவார்? நாங்களும் அவரோட போய்
இருக்கலாமே?

ஓடிக்க்லோனை தலையில் பூசிய படியே. போகலாமே உங்களுக்கு அங்கதானே ஸ்கூல் பார்த்து
வெச்சிருக்கோம்
அடுத்த கிழமையே போகலாம் என்ன என்று அவனுக்கு உடை மாற்றி விட்டுவிடுகிறேன்.

என் பெயர் நந்தினி கணவர் வசீகரன் மகன் வசுநந்தன். வசீகரன் வன்னியில் அரச
பணியில் இருக்கிறார் நாம் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறோம் ஒவ்வொரு
வாரமும் அவர் வந்து செல்வது வழக்கம் நாமும் சேரந்து போகலாம் என
காத்திருக்கிறோம். அவர் தனித்தும் நாம் இங்கும் என இருப்பது எவ்வலவு காலம் என
யோசிக்கிறேன்.

அய்யா அப்பா வந்தாச்சு வந்தாச்சு என ஓடி செல்கிறான் வாசலுக்கு.
அவனை தூக்கிய படி வந்த வசீகர் என்னப்பா நீரும் மழையில் விளையாடினீரே
நல்லாருக்கு. என்று விட்டு வசியுடன் விலையாடிய படியே இரவு உணவுக்கு
தயாரானார்கள்

அம்மா வெள்ளைப் புட்டு கோழியும் செய்யுங்கோ என்றுவிட்டு விளையாடிலேயே
மும்முரமாய் இருந்தான் அப்பாவின் காலையே சுற்றி வந்தான் வசி.

அப்போது தட தட என கதவு தட்டும் சத்தம் பயங்கரமாக இருந்தது.

அப்பா யாரெண்டு பாருங்கோ என சொல்ல வசீகரன் எழுந்து போய் கதவைத் திறந்தார்.

அங்கே சீருடை தரித்த இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர்
விசாரணை என்றனர்.

வசீகரன் வன்னியில் இருந்து வந்திருப்பது தெரிந்ததும் கேள்விகள் அதிகமாயின
விசாரணை இருக்கு என்று அழைத்து போயினர்

வசி அழுதும் எனது அழுகையையும் பொருட்டில்லாது இழுத்துப் போயினர்.

நாம் இருவரும் தனித்து விடப் பட்டோம் இருவரின் கண்ணிலும் கண்ணீர் மழை எனப்
பொழியத் துவங்கியது
வெளியில் மழை நின்றிருந்தது.

மழையும் வெயிலும் மாறி மாறி வந்தாலும் வசீகரன் பற்றி மட்டும் பதிலே இல்லை

வசீக்கும் நிலமை புரியத் துவங்கியதில் அப்பா பற்றி கேள்வி எழுவதில்லை, காலம்
அதன் பாட்டுக்கு போகிறது
இப்போது வசிக்கும் பதினொரு வயதாகிறது. மழை பெய்கிறது அதனை ரசிக்கத்தான்
அவனுக்கு இப்போது பொழுது இருப்பதில்லை.

உலகம் அழியட்டுமே


கண்கள் கனன்றது
காலையில் ஏன் இந்த வெப்பம்
அதிகாலைப் பனியில்
மூழ்கிப் போயிருக்கும் மலர்கள்
ஏன் கறுத்திருந்தன?

கார்காலம் போல்
மூண்டு கொண்ட போர் கோலங்களாலா?
மனிதனே மனிதனை எரிக்க
கண்டு கொண்ட புது வஸ்துக்களாலா?

மரித்துக் கொண்டிருக்கும் மனிதனை
வெறுத்து ஒதுக்க துவங்கிய
ஒளிமுதலின் வேலையோ?
கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகிறது உலகம்.

உறக்கத்திலிருந்து விழிக்கிறது வீடுகள்
அடுத்த வீட்டில் எரிவது பார்த்து
அறைக்குள் கதவடைக்கிறது சுயநலம்
மெல்ல மெல்லமாய் தீச்சுவாலையாகிறது

சேர்த்து வைத்த பணத்தை
எண்ணி எடுத்துக் கொண்டு ஓடுகிறது
ஊழலில் விழைந்த கூட்டம்
அவர்களை அறியாதே தொடர்கிறது தீ

லஞ்சம் வாங்கி காணி சேர்த்தவர்
கண் முன்னே எரிவது கண்டு
லஞ்சம் கொடுத்தவன் வயிறு போல புகைந்தார்
உலகம் அக்கினிக்குள் முழுவதுமானது

அக்காளை கூட விட்டு வைக்காது
காமாக்னி வளர்த்தவன் சுதாரிப்பதற்குள்
படுக்கையிலும் பற்றிக் கொண்டது
நின்று கொன்றது அக்கினி தெய்வம்

இம்சைகள் கொண்ட உலகம்
சில்லு சில்லாய் வெடிக்கப் போகிறது
அக்கினியின் சிறகுக்குள் உலகம்!

புதிய உலகம் மெல்லமாய் எட்டிப் பார்த்தது
குழந்தை சிரிப்புடன் இயற்கை வனப்புடன்!

கட்டிப் போட்டு காதல் செய்கிறாய்

கவிதை கவிதை என
உன்னைப் படுத்தியதில்
நீ வாங்கி கொடுத்த
பாரதியார் கவிதைகள்
படிக்கப்படாமலே இருக்கிறது
உன்னால் படிக்கப்படாத என்னைப் போலவே

ஒரே ஒரு கவிதை
எழுதி தா என்றேன்
வெறும் நிமிட செலவில்
நீ எழுதியது
நம்முடைய இணைந்த பெயர்கள்

'எனக்காக என்ன தருவாய் '
ஆவலாய் கேட்டு நின்றேன்
அலட்சியமாய் ஒன்றும் இல்லை என்றாய்
சோர்ந்து போய் குனிகையில்
''நானே நீ தானே
நமக்குள் ஏது பாகப்பிரிவினை'
என காதல் செய்கிறாய் நீ

உன்னை ரசிக்கிறேன்

உனக்கும் எனக்கும்தான்
எத்தனை முரண்பாடுகள்
ஆனாலும்
உனை விட்டு விலக மட்டும்
காரணம் கிடைத்ததே இல்லை


எப்போதாவது நீ
கோபத்தில் பேசாதிருந்தால்
அன்று மட்டும்
உலகமே நின்று விடுகிறது எனக்கு


இரு இரு என்று
இருட்டும் வரை பேசிவிட்டு
வீடு வரை போவாயா என
பத்தாயிரம் தடவை நீ கேட்பதில்
தெரியும் தவிப்பில்
இருக்கிறது காதல்!

வேண்டாம் வேண்டாம் என்றே
பேசிய பொழுதுகள்
புலர்வது தெரியாமல்
முடிந்த இரவுகள்
அறிந்த காதலை
நாம் ஒத்துக் கொண்டதே இல்லை


கேலி பேசிய காவலருக்கும்
மாமா என கட்டிக் கொண்ட
பக்கத்து வீட்டு சிறுமிக்கும்
நீ எனக்கு யார் என்று
தெரிந்திருந்ததை புரிந்துகொள்ள
நாட்கள் தேவைப்பட்டன எனக்கு

உன்னை ரசிக்கிறேன்

நீ குழந்தையாகிறாய் அடிக்கடி
அங்கே நில்
அதை செய்யாதே
பேசாது வா
கண்டிப்புகளுடன் நான்


எத்தனை முறை
கோபித்தாலும்
அத்தனை முறை
நெருக்கமாகிறாய் நீ


எவ்வளவு சொன்னாலும்
அடம்பிடிக்கும் குழந்தையாவே
சாதித்துக் கொள்கிறாய் நீ
உன்னை கண்டித்தே
தளர்ந்து போகிறேன் நான்